இன்று அண்ணல் பாபா
சாஹேப் அம்பேத்கரின் 125ம் பிறந்தநாள்! ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து
பல்வேறு பொருளாதாரத் தடைகளைக் கடந்து வெளிநாட்டில் படித்து, ஒரு மாபெரும்
நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கியதுடன்
இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக, விடிவெள்ளியாக
இன்றும் திகழ்பவர் அம்பேதகர். குலத்தால் தாழ்ந்தவன் என்ற சொல்லைப் போக்கும்
மாமந்திரம் கல்வி மட்டுமே என்ற பெரும் உண்மையை தன் வாழ்க்கை மூலம்
அனைவருக்கும் உணர்த்தியவர் அம்பேத்கர். ‘கல்வி என்ற ஆயுதத்தை கைக்கொள்…
உலகம் உன்னை உயர்த்தித் தொழும்’ என்ற அவர் சித்தாந்தமே ஒரு இனத்தையே
படிப்பின்பால் உந்தித் தள்ளியது. “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல்
தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம்
நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை,” என்பதுதான்
அண்ணலின் நம்பிக்கை. அண்ணல் அம்பேத்கர் சாதியக் கொடுமைகளை ஒழித்து சம
உரிமையை நிலைநாட்ட பாடுபட்ட தலைவர் - சாதீய தலைவர் அல்ல!